சென்னை:-
வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு, ‘சிலிண்டர்’ விலை, இன்று (ஜூலை 1) முதல், 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.
பொதுவாக கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு விலையையும் உயர்த்துவது வழக்கம். அதன்படி கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை தினசரியும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, மாதத்தில் ஒரு முறை அல்லது இருமுறை மாற்றம் செய்யப்படுகின்றன.
இதனிடையே, வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைக்கொண்ட சிலிண்டர் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி 610 ரூபாயாக இருந்தது. அதன்பிறகு, படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. 3 மாதத்திற்கு பிறகு எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி இருக்கிறார்கள்.
அதன்படி, சென்னையில் கடந்த மாதம் ரூ.825.50 விலையில் விற்பனையான சமையல் எரிவாயு சிலிண்டர், இன்று முதல் ரூ.850.50 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் மீதும் ரூ.84.50 காசுகள் விலை உயர்ந்து சிலிண்டர் ரூ.1,687.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கனவே, பெட்ரோல் விலை உயர்வால் தள்ளாடும் நடுத்தர வர்க்கத்தினர் தற்போது சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளதால் திக்குமுக்காடி போயுள்ளனர்.