புதுடெல்லி:
கொரோனா தொற்று 3வது அலை உருவாகி உள்ளதாகவும் அதில் கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் பெரிதும் மாறுபட்டுள்ளன என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது, மழைக்காலம் என்பதால் இருமல், சளி மற்றும் காய்ச்சல் வருவது இயல்பாக உள்ளன. இது பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு என மருத்துவர்கள் எண்ணினார்கள்.
இருமல், சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் குணமடைந்தனர். எனினும், சிலருக்கு அறிகுறிகள் நீடித்தது. காய்ச்சல் தொடங்கிய ஒரு வாரம் கழித்து வாசனை மற்றும் சுவையை உணர்வதை இழந்தனர்.
மருத்துவர்கள் சந்தேகத்தின் பேரில் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.
கொரோனா நோயாளிகளுக்கு முன்பு இருந்தது போல் வறட்டு இருமல் இல்லை. ஆனால் தற்போது ஈரமான அல்லது சளியுடன் இருமல் இருக்கிறது. மேலும், குறைந்த அளவு காய்ச்சலும் உள்ளது.
குறைந்த அளவு காய்ச்சல் இருப்பதால் பொதுமக்கள் அலட்சியமாக உள்ளனர்.எனவே இதன் காரணமாக, கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று 3வது அலையின் அறிகுறிகள் பின்கண்டவாறு இருக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
- 7 முதல் 8 நாட்களுக்கு பிறகே சுவை, வாசனை இழப்பு.
- சளியுடன் கூடிய இருமல் ஏற்படுகிறது.
- மிக குறைந்த வெப்பநிலையில் காய்ச்சல்.
- குறைவான உடல் சோர்வு.
- ஒரு சதவீதத்துக்கும் குறைவான நோயாளிகளுக்கு மட்டுமே சுவாச கோளாறு.
கொரோனா தடுப்பூசி இரண்டு முறை போட்டுக் கொண்டுள்ளதால் கொரோனா பாதிக்காது என்ற தவறான நம்பிக்கை பலரிடம் நிலவுகிறது.
தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமின்றி ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் 3வது அலையில் பாதிக்கப்படலாம். எனவே, மக்கள் கடந்த காலங்களை காட்டிலும் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.