திருமலையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஏழுமலையான் கோயிலில் பக்தர்களை அனுமதியை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்து, ஆந்திர அரசிடம் இதுகுறித்து கலந்தாலோசித்தது. அரசின் வழிகாட்டுதலின்படி திருமலை ஏழுமலையான் கோயிலை ஒருவாரம் மூட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
தற்போது திருமலையில் 18 ஆயிரம் பக்தர்கள் உள்ளனர். ஒரு மணிநேரத்திற்கு 4 ஆயிரம் பக்தர்கள் என தரிசனத்திற்கு அனுமதித்து வெள்ளி காலை ஆர்ஜித சேவா டிக்கெட் பெற்ற பக்தர்களை மட்டும் தரிசனத்திற்கு அனுமதித்த பின், கோயிலில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட உள்ளது. ஒரு வாரத்திற்கு பின் கொரோனா தொற்றின் வேகம் குறையத் தொடங்கிய பின் பக்தர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது. தொற்றின் வேகம் அதிகரிக்கும் நிலையில் இந்த அனுமதி மறுப்பு வரும் மார்ச்.31ம் தேதி வரை நீடிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
வழக்கமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் அதிகாலை இரண்டரை மணிக்கு திறக்கப்பட்டு 3 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் பக்தர்களுக்கான தரிசன அனுமதி வழங்கப்படும். நேற்று அதிகாலை இரண்டரை மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, ஏழுமலையானுக்கு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, நைவேத்தியம் ஆகிய கைங்கர்ய சேவைகள் நடத்தப்பட்டன.
பக்தர்கள் வருகை இல்லாத காரணத்தால் ஏழுமலையான் கோவில் வழக்கத்துக்கு மாறாக வெறிச்சோடிக் காணப்பட்டது. இந்த நிலையில் பக்தர்கள் வருகை இல்லாததால் இரவு ஒன்றரை மணிக்கு நடத்தப்படும் ஏகாந்த சேவை நேற்று இரவு எட்டரை மணிக்கு நடத்தப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது.
திருமலை மட்டுமல்லாமல் திருப்பதி மற்றும் திருச்சானூரில் உள்ள தேவஸ்தானத்திற்கு சம்மந்தப்பட்ட கோயில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
1892ம் ஆண்டிற்கு பின் தற்போது 128 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பக்தர்கள் வருகை இல்லாததால் திருப்பதியில் தங்கும் அறைகள் விடுதிகள் மற்றும் சுற்றியுள்ள இடங்கள் அனைத்தும் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது