புவனேஸ்வர்:-
ஒடிசாவில் கொரோனா தாக்கம் காரணமாக கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிங்கள் 10 ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை ரத்து செய்துள்ளது. இதனை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். பள்ளிகளில் தேர்வு ரத்து செய்ததை போன்று கல்லூரி தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என கல்லூரி மாணவர்கள் கோரிக்கை வைக்க முடிவு செய்து உள்ளனர்.
இதனிடையே ஒடிசா மாநில அரசு கல்லூரி இறுதி ஆண்டு தேர்வை ரத்து செய்து உயர்கல்வித்துறை அமைச்சர் அருண் சாஹூ உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து ஒடிசா மாநில உயர்கல்வித்துறை தெரிவித்திருப்பதாவது:-
கொரோனா தாக்கம் காரணமாக மாநிலத்தில் இளநிலை மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. யூஜிசி அளிக்கும் பரிந்துரையின் படி Internal Marks மற்றும் பிற செமஸ்டர் தேர்வுகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் கடைசி செமஸ்டர் தேர்வுக்கான மதிப்பெண்கள் வழங்கப்படும் என மாநில உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது. மேலும் இதன் முடிவுகள் ஆகஸ்ட் இறுதியில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் அதேவேளையில் மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கான தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.