மும்பை:-
கொரோனா சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் வரையில் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகள் அறிவித்துள்ளன.
கடந்த மே மாதத்தில் பல்வேறு பொதுத் துறை வங்கிகள் ரூ.5 லட்சம் வரையில் தனிநபர் கடன் வழங்கும் சிறப்புத் திட்டங்களை அறிவித்தன.
இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தனக்காகவும் தனது குடும்பத்தினருக்காகவும் கடன் பெற்று அதை சிகிச்சைகளுக்கு செலவு செய்யலாம். கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியபோது மத்திய ரிசர்வ் வங்கி இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
சம்பளம் பெறும் நபர்களுக்கு 6.85 சதவீதத்தில் தொடங்கி கடன் கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தது ரூ.25,000 முதல் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரையில் கடன் பெறலாம்.
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எஸ்பிஐ கவாச் என்ற பெயரில் 8.5 சதவீத வட்டியில் ரூ.5 லட்சம் வரையில் கடன் வழங்குகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 8.5 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம் வரையில் கடன் கொடுக்கிறது. பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளும் கொரோனா சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் வரையில் கடன் வழங்குகின்றன.