டெல்லி :
இந்தியாவில் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோத முறையில் சேகரித்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மற்றும் குளோபல் சயின்ஸ் ரிசர்ச் லிமிடெட் (G.S.R.L) நிறுவனங்கள் மீது CBI வழக்கு பதிந்துள்ளது.
பிரிட்டனை சேர்ந்த அரசியல் ஆலோசனை வழங்கும் நிறுவனம் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா.இந்நிறுவனம் 5 கோடிக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்களின் சுயவிவரங்களை திருடியது 2018-ல் வெளிச்சத்திற்கு வந்தது. பெரும்பாலான மக்களின் தகவல்கள் அமெரிக்காவிலிருந்து பகிரப்பட்டிருப்பதாக பேஸ்புக் நிறுவனம் கூறியது. இந்தியாவில் 5.62 லட்சம் பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இத்தகவல்கள் மூலம் தேர்தலில் ஆதிக்கம் செய்ய முயன்றது வெளிச்சத்திற்கு வந்தது.
இந்தியாவில் தேர்தல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு இச்செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அப்போது பேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியது. 2018 செப்டம்பரில் CBI முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்தது. அதில் குளோபல் சயின்ஸ் ரிசர்ச் லிமிடட் நிறுவனர், ஒரு செயலியை உருவாக்கி சுமார் 5.6 லட்சம் இந்திய பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்கள், அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ள பக்கங்கள் போன்ற தகவல்களை திருடியது அம்பலமானது.
தற்போது கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மற்றும் G.S.R.L நிறுவனங்கள் CBI வழக்கு பதிவு செய்துள்ளது. மேற்கொண்டு நடத்தப்படும் விசாரணைகளில் அவர்கள் சேகரித்த தகவல்கள் எந்தெந்த கட்சிகளுக்கு அல்லது தனிநபர்களுக்கு பயன்பட்டது என்பது வெளிச்சத்துக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.