தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நாளை மாலை 15 லட்சத்துக்கும் அதிகமான தீபங்களை ஏற்றி நடைபெற இருக்கும் தீபோற்சவத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
அயோத்தி சரயு நதிக்கரையில் தீபாவளியை முன்னிட்டு அதிகமான தீபங்களை ஏற்றி நடைபெற இருக்கும் பிரமாண்ட தீபோற்சவ நிகழ்ச்சி 6-வது முறையாக நடக்கிறது. ஆனால் இந்த ஆண்டு 15 லட்சத்துக்கும் அதிகமான தீபங்களை ஏற்றுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் இந்த பிரமாண்ட தீபோற்சவத்தை பிரதமர் மோடி நாளை மாலை தொடங்கி வைக்கிறார். சரயு நதிக்கரையில் நடைபெற இருக்கும் ஆரத்தி வழிபாட்டிலும் பின்னர் ராம பிரானுக்கு சிறப்பு பூஜைகளும் செய்கிறார்.
மேலும் ராமர் கோவில் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்கிறார். நாளை நடைபெற இருக்கும் பிரமாண்ட தீபோற்சவ நிகழ்ச்சியில் 11 ராம்லீலா அலங்கார ஊர்திகள், அனிமேஷன் ஊர்திகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. அயோத்தி தீபோற்சவ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதல் முறையாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.