மும்பை:-
அதிர்ஷ்டம் தான் கூரையை பிய்த்துக்கொண்டு வரும் என்பார்கள் ஆனால் மும்பையில் கூரையை பிய்த்துக்கொண்டு மான் ஒன்று வந்துள்ளது
நாடெங்கும் ஊரடங்கு காரணமாக சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்துள்ளதால், மயில்கள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் ஊருக்குள் சுதந்திரமாக உலா வருவதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில் மும்பையின் போவாய் (Powai) அருகே உள்ள ஹனுமன் தேக்டி சேரி (Hanuman Tekdi Slum) பகுதியில் நேற்று இரவு நேரத்தில் திடீரென புள்ளி மான் ஒன்று மேற்கூரையை பிய்த்துக்கொண்டு குடிசைக்குள் விழுந்துள்ளது.
நள்ளிரவு 1.30 மணிக்கு அரங்கேறிய இந்த சம்பவத்தால் குடிசைக்குள் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் மானை பிடித்து அருகே பொரிவ்லி (Borivli) உள்ள சஞ்சை காந்தி தேசிய பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து பேசிய தானே வனத்துறை அதிகாரி ஜிதேந்திர ராம்கோக்கர் :-
அந்த மான் அருகில் உள்ள மலை அடிவாரத்தில் இருந்துள்ளதாகவும், சிறுத்தை/புலி துரத்தியதினால் அஞ்சி நகரத்திற்கு வந்திருக்கலாம் என்று கூறினார்.
மேலும் மிகுந்த அச்சத்தில் இருக்கும் அந்த மானுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இரவு நேரத்தில் குடிசையின் கூரையை பிய்த்துக்கொண்டு விழுந்த அந்த மானின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.