ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைகிறது.
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவல் 17மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 88 பேருக்கும், டெல்லியில் 67 பேருக்கும், தெலங்கானாவில் 38 பேருக்கும், தமிழ்நாட்டில் 34 பேருக்கும், கர்நாடகாவில் 31 பேருக்கும் குஜராத்தில் 30 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று உள்ளது. இவர்களில் 122 பேருக்கு அறிகுறிகள் சற்று அதிகமாக தென்பட்டுள்ளன. 114 பேர் குணமடைந்த நிலையில், 244 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா, மேற்குவங்கம், மிசோரம், கர்நாடகா, பிகார், உத்திரபிரதேசம், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைகிறது. ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க மத்திய உயர்மட்ட குழு வருகை தரவுள்ளதாகவும் அந்த குழுவில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை வல்லுநர்கள் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த தேவையான ஆலோசனைகளை மத்திய குழு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.