மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அணைத்து பேச்சு வார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது.
இருப்பினும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டெல்லியில் விவசாயிகள் போராட தொடங்கி இன்றுடன் 6 மாதம் நிறைவடைந்து விட்டது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு முதல் முறையாக பதவியேற்ற 7 ஆம் ஆண்டின் தினத்தையொட்டியும் மே 26 ஆம் தேதியைக் கருப்பு தினமாக அனுசரிக்கப் போவதாக பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டு அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்புகள் அறிவித்தது. விவசாயிகளின் இந்தக் கருப்பு தின போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளது.
இந்நிலையில் டெல்லி எல்லையில் விவசாயிகள் இன்று (26.05.2021) கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல மாநிலங்களில் விவசாயிகள் இல்லங்களிலும் கருப்பு கொடி ஏற்று இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.