டெல்லி:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெறக்கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் பல்வேறு எல்லைகளில் 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக விவசாய குழுக்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.அந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்து, விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சார்பில் வரும் 8-ம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஹரியானா-டெல்லி எல்லையான சிங்கு பகுதியில் போராட்டம் நடத்திவரும் பாரதீய கிசான் அமைப்பின் பொதுச்செயலாளர் லஹோவால் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“நேற்று நடந்த பேச்சுவார்த்தையின் போது வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என அரசாங்கத்திடம் கூறினோம்.நாடு முழுவதும் டிசம்பர் 5-ம் தேதி பிரதமர் மோடியின் உருவப்படங்கள் எரிக்கப்படும்.டிசம்பர்-8-ம் தேதி நாடு முழுவதும் ஒரு நாள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று கூறினார்.