2002-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரக நாட்-வெஸ்ட் (Nat West) ஒருநாள் தொடரில் முகமது கைப்-யுவராஜ் கூட்டணி நிலைத்து நின்று போராடியது போல், நாமும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி வெல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாடுமுழுவதும் இன்று ஜனதா சுய ஊரடங்கை (Janatha Curfew) பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, மக்கள் அனைவரும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டுகளுக்குள் தங்கி இருக்கும்படி மோடி அறிவுறுத்தினார்.
முதியோர், குழந்தைகள் தேவையின்றி வெளியே வர வேண்டாம், சமூக இடைவெளியே பின்பற்ற வேண்டும் என்று மக்களிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
பிரதமர் மோடியின் கருத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்து மக்கள் அனைவரும் 22-ம் தேதி ஜனதா ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும், வீட்டுக்குள் இருந்து கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
முகமது கைப்புக்கு ட்விட்டரில் பதில் அளித்த பிரதமர் மோடி, ‘மற்றொரு வலுவான பார்ட்னர்ஷிப் அமைக்க சரியான நேரம்’ என்று தெரிவித்தார்.
‘இரு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்கள்(யுவராஜ்சிங்,முகமது கைப்) அமைத்த பார்ட்னர்ஷிப் என்றென்றும் மறக்க முடியாது. இப்போது அதேபோன்று மற்றொரு பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய தருணம். அனைத்து இந்தியர்களும் ஒன்றாக கூட்டுசேர்ந்து, கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி வெல்ல வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
2002-ம் ஆண்டு ஜூலை மாதம் லண்டனில் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக நடந்த நாட்வெஸ்ட் ஒருநாள் தொடரில் தோல்வியில் பிடியில் இருந்த இந்திய அணியிைய முகமது கைப், யுவராஜ் சிங் கூட்டணி மீட்டு வெற்றி பெற வைப்பார்கள். இருவரும் சேர்ந்து 121 ரன்கள் பாட்னர்ஷி்ப் அமைத்தார்கள். கங்குலி தலைமையில் இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்பட்டது. இதைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.