தூத்துக்குடி:-
சாத்தான்குளத்தில் செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளை சிறையில் மரணமடைந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து தரப்பில் இருந்தும் இந்த சம்பவம் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த சிறை மரணம் தொடர்பாக உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு விசாரணை தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு கோவில்பட்டி கீழமை நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றார்.
நீதிபதிக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததோடு அவரை மிரட்டும் தோணியில் நடந்துகொண்டனர். அதோடு நீதிபதி பாரதிதாசனை, ‘உன்னால் ஒன்னும் புடுங்க முடியாது’ என்று காவலர் மகராஜன் கேட்டதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீஸ் நிலையத்தில் அதுவும் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாமானியர்களின் நிலை என்னவாவது என்கிற கேள்வி மக்களிடத்தில் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டனர்.
மேலும், இந்திய வரலாற்றில் முதல் முறையாக சாத்தான்குளம் நீதிமன்றம் வருவாய்த் துறையினரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்து மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பல்வேறு விஷயங்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய தமிழ்நாடு, தற்போது இதுபோன்ற மோசமான விஷயத்திற்கும் எடுத்துக்காட்டாய் மாறியுள்ளது.
இதனிடையை, இது குறித்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான என்.சி. அஸ்தானா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:-
இந்தியாவில் காவல்துறை சட்டம் 1861- ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு காவல் நிலையத்தை வருவாய்த்துறை அதிகாரிகளிடத்தில் நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது. இந்த இடத்தில் மூத்த அதிகாரிகள் மீது கூட நம்பிக்கை இல்லையா? என்ன ஒரு அவமதிப்பான சம்பவம் இது என்று வேதனை தெரிவித்துள்ளார்.
1986- ம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியான என்.சி அஸ்தானா முன்னர் கேரள மாநில டி.ஜி.பியாக இருந்தவர். மேலும், எல்லை பாதுகாப்புப்படை மற்றும் சி.ஆர்.பி.எப் – பின் கூடுதல் இயக்குனராகவும் இருந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு அஸ்தானா ஓய்வு பெற்றார்.