மைசூரில் எம்.பி.ஏ. மாணவி ஒருவரை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.
மைசூரு நகரில் எம்.பி.ஏ. மாணவி ஒருவர் கடந்த 24ந் தேதி இரவு மைசூரு சாமுண்டி மலையடிவாரத்தில் சென்று கொண்டிருந்தார். தனது ஆண் நண்பருடன் சென்றுகொண்டிருந்த அவரை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கி பாலியல் வன்முறையில் ஈடுபட்டது.
இதனை மொபைல் ஃபோனில் வீடியோ பதிவும் செய்தனர். பின்னர் மாணவியின் தந்தைக்கு போன் செய்து ஆன்லைன் வழியாக மூன்று லட்ச ரூபாய் அனுப்பும்படி கேட்டுள்ளனர், ஆனால் அவர் ஒப்புக்கொள்ளாததால் மாணவியை மேலும் தாக்கியுள்ளனர். அவர் மயக்கமடைந்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் போர்கொடி தூக்கினர். அதனையடுத்து, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
இதனிடையே இந்த குற்ற சம்பவம் நடந்தபோது கிடைத்த செல்ஃபோன் சிக்னல் அடிப்படையில், கர்நாடக தனிப்படை போலீஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கைதானவர்கள் திருப்பூர், ஈரோடு பகுதிகளை சேர்ந்த கார்ப்பெண்டர், எலக்ட்ரிஷன், ஓட்டுநர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. கைதான ஐவரில் ஒருவர் 17 வயது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை தேடிவாருவதாக கர்நாடக டிஜிபி ப்ரவீன் சூட் தெரிவித்துள்ளார்.