தமிழக முன்னாள் ஆளுநரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ரோசய்யா (88) உடல்நலக் குறைவால் காலமானார்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் 1933 ஆம் ஆண்டு பிறந்த கொனிஜெட்டி ரோசய்யா காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக திகழ்ந்தார்.
அன்றைய பிரிக்கப்படாத ஆந்திராவின் முதல்வராக இருந்து வந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு ரோசய்யா அம்மாநில முதல்வராகப் பதவியேற்றார். 2010 நவம்பர் 24 வரை மட்டுமே அவர் அப்பதவியில் நீடித்தார். அதற்குள் ஆந்திர மாநில காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் வலுக்க அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
1979 முதல் 2009 வரை அமைச்சராக இருந்தவர். 16 முறை ஆந்திர மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்து சாதனை படைத்தவர். 2011ல் தமிழக ஆளுநராக அவர் நியமிக்கப்பட்ட நிலையில், 2014ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பாஜக ஆட்சிக்கு வந்ததால் தமிழக ஆளுநர் ரோசய்யா மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மாற்றப்படவில்லை. பதவிக்காலம் முழுவதும் நீடித்தார்.
தமிழ்நாட்டின் ஆளுநர் பதவியில் இருந்து 2016-ல் ஒய்வு பெற்றதை அரசியல் களத்தில் இருந்து விலகி ஆந்திராவில் உள்ள தனது குடும்பத்தினருடன் ரோசய்யா வாழ்ந்து வந்தார். அவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆந்திராவில் உள்ள ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோசய்யா இன்று காலமானார். ரோசய்யாவின் மறைவிற்கு பல்வேறு கட்சி தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.