மத்திய பிரதேசத்தில் இரண்டு டோஸ் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டவர்களுக்கு தள்ளுபடியில் மதுபானம் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் மந்த்சூர் மாவட்டத்தின் சிதாமாவ் பாதக், பூனியாகெடி மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட மது பிரியர்கள் அதற்கான சான்றிதழை காட்டி 10 சதவீத தள்ளுபடி விலையில் மதுபானங்களை வாங்கி கொள்ளலாம் என்று கலால்துறை அறிவித்துள்ளது.
மேலும் இந்த திட்டம் விரைவில் மாவட்டம் முழுவதும் உள்ள மதுபான கடைகளில் அமல்படுத்தப்படும் என்றும் கலால்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கலால் துறையின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த திட்டம் தடுப்பூசி செலுத்திகொள்வதை ஊக்குவிக்கும் விதமாக இல்லை என்றும் மது குடிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக இருப்பதாக மந்த்சூர் எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் இதுவரை மொத்தம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 117 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.