ஷில்லாங்:-
மேகாலயா மாநிலத்தில் நேற்று நள்ளிரவில் ஆற்றில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
மேகாலயா மாநிலம் துரா என்ற பகுதியில் இருந்து ஷில்லாங் பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், 21 பயணிகள் பயணம் செய்தனர். பேருந்து, கிழக்கு காரோ மற்றும் மேற்கு காசி மலைப்பகுதி மாவட்ட எல்லை அருகே அதிகாலை வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நோங்ச்ராம் பாலத்தில் இருந்து ரிங்டி ஆற்றில் விழுந்தது.
இதில், பேருந்து ஓட்டுநர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த ரோங்ஜெங் மற்றும் வில்லியம் நகர் பகுதி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் சுவரில் மோதி கவிழ்ந்ததாக பேருந்தில் பயணித்த ஒருவர் தெரிவித்துள்ளார். பேருந்து வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.