மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் இரண்டு மாதங்களுக்கு மேல் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அணைத்து பேச்ச வார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன.
அதனையடுத்து குடியரசு தினத்தன்று நடந்த ட்ராக்டர் பேரணியில் விவசாயிகளும் போலீசார்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் ஒரு விவசாயி உயிரிழந்தார்.மேலும் பலர் காயமடைந்தனர். அத்தனையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு உள்ளூர் தலைவர்கள் முதல் உலக தலைவர்கள் வரை ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சூழலியல் போராளி கிரேட்டா தன்பெர்க், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று ட்வீட் செய்தார். அதில், “போராடி வரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம்” எனப் பதிவிட்டார். அதனையடுத்து இந்த பதிவிற்கு டெல்லி காவல்துறை கிரெட்டாவுக்கு எதிராக “குற்றவியல் சதி மற்றும் மதத்தின் அடிப்படையில் பகைமையை ஊக்குவித்தல்” சட்டப் பிரிவின் கீழ் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் கிரேட்டா தன்பெர்க் இன்று மீண்டும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். அதில், ““விவசாயிகளின் அமைதியான போராட்டத்திற்கு நான் இப்போதும் உறுதுணையாக நிற்கிறேன். மனித உரிமை மீறல்கள் மற்றும், அச்சுறுத்தல்கள் மூலமாக எதையும் மாற்றியமைக்க முடியாது ” என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பதிவின் மூலம் டெல்லி காவல்துறைக்கு பதிலடி கொடுத்துள்ளார் கிரேட்டா தன்பெர்க்.