சோபோர்:-
ஜம்மு-காஷ்மீரில் வடக்கு பகுதியில் பாரமுல்லா மாவட்டத்தில் சோபோர் பகுதியில் நேற்று பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் படை வீரர் ஒருவர் பலியாக மேலும் மூன்று வீரர்கள் காயமும் அடைந்தனர்.
இந்த தாக்குதலின்போது அந்தப் பகுதியில் பேரனுடன் நடந்து சென்றுக் கொண்டிருந்த 60 வயது முதியவர் மீது இரண்டு குண்டுகள் பாய்ந்தன. இதில், முதியவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். அதிர்ஷ்டவசமாக சிறுவனுக்கு தீங்கு நிகழவில்லை. திடீரென்று தன் தாத்தா ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தைப் பார்த்த சிறுவன் உடல் மீது கதறியழுது கொண்டு இருந்தான்.
அப்போது, அங்கு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த பாதுகாப்புப் படை வீரர் சிறுவனை தன் பாதுகாப்பில் வைத்துக் கொண்டார். இதனால், சிறுவன் உயிர் பிழைத்தான்.
பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் அதிகாரிகள் சிறுவனை மீட்டு, தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திலிருந்து கொண்டு சென்றனர். அழுதபடியே இருந்த சிறுவனை போலீஸ் அதிகாரிகள் ஆசுவாசப்படுத்தினர்.
சாலையில் இறந்து கிடந்த தனது தாத்தாவை சிறுவன் எழுப்ப முயற்சித்தது, பாதுகாப்பு படை வீரரை நோக்கி சிறுவன் செல்லும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.
கடந்த மூன்று மாதத்தில் இது இரண்டாவது தாக்குதல் ஆகும். கடந்த ஏப்ரல் 18ம் தேதி தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர் இதில் 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.