மலப்புரம்:-
கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள ஒத்துக்குங்கல் நகரைச் சேர்ந்த ஏ.கே.ஷிஹாபுதீனின் சிறிய கோழி பண்ணையில் ஆறு கோழிகள் பச்சை நிற கருவுடன் கூடிய முட்டைகளிட்டு வருகின்றன தற்பொழுது இதுதான் கேரளாவில் மிகவும் பரபரப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஒன்பது மாதங்களுக்கு முன்பு, ஷிஹாபுதீன் தனது கோழிப்பண்ணையில் ஓரு கோழி போட்ட முட்டையில் பச்சை மஞ்சள் கரு இருப்பதைக் கண்டறிந்தார். அது பாதுகாப்பானது தான என சந்தேகம் எழுந்ததால் அவரோ அவரது குடும்பத்தினரோ அதை உட்கொள்ளவில்லை.
அந்த கோழியால் போடப்பட்ட சில முட்டைகள் குஞ்சிகள் பொறித்தன. சுவாரஸ்யமாக, அதில் இருந்து உருவாகிய புதிய கோழிகளும் பச்சை முட்டையிட ஆரம்பித்தன.
இது குறித்த படங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். பச்சை மஞ்சள் கருக்கள் கொண்ட முட்டைகளின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிய பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் மக்கள் ஷிஹாபுதீனை தொடர்பு கொள்ளத் தொடங்கினர்.
சமீபத்தில், கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் (Kerala Veterinary and Animal Sciences University (KVASU)) விஞ்ஞானிகள் சிறப்பு கோழிகள் மற்றும் முட்டைகள் குறித்து ஒரு ஆய்வைத் தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்தது ஷிஹாபுதீன் கூறியதாவது:-
இந்த பச்சை கரு முட்டைகளிலிருந்து கோழிகளை உருவாக்கலாம் என்று நாங்கள் கண்டறிந்ததை தொடர்ந்து நாங்கள் பச்சை முட்டைகளை உட்கொள்ளத் தொடங்கினோம். சில வாரங்களுக்கு முன்பு நான் சில படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த பின்னர் இந்த முட்டை நிகழ்வின் செய்தி பரவியது.
பச்சை கரு முட்டைகளுக்காக பலர் என்னை அணுகியுள்ளனர். ஆனால், இப்போது நான் அவற்றை குஞ்சு பொரிப்பதற்காக வைத்திருக்கிறேன். கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இந்த நிகழ்வு குறித்த ஆய்வை முடித்த பின்னர் முட்டைகள் விற்கப்படும்.
இது குறித்து கூறிய விஞ்ஞானிகள் சில சிறப்பு தீவனங்களை கோழிகள் சாப்பிடும் போது பச்சை மஞ்சள் கருவுடன் முட்டையிடுவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என கூறினர். இருப்பினும், இந்த கோழிகளுக்கு நான் எந்த சிறப்பு உணவையும் கொடுக்கவில்லை, என்று அவர் கூறினார்.
இது தொடர்பாக பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஹரிகிருஷ்ணன் கூறுகையில்:-
சில ஆய்வாளர்கள் கோழிகளுக்கு சில சிறப்பு ஊட்டங்களை வழங்குவதன் மூலம் மஞ்சள் கருவின் நிறத்தை மாற்ற முடியும் என்று கூறுகிறார்கள். அந்த சாத்தியத்தை நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
நாங்கள் பல்கலைக்கழகத்தில் வளரும் கோழிகளைக் கவனிப்போம். மூன்று வாரங்களுக்குப் பிறகு, கோழிகள் வெள்ளை முட்டையிட்டால், கோழிகள் பண்ணையில் ஏதாவது சிறப்பு சாப்பிடுகின்றன என்பதை உறுதிப்படுத்த முடியும். மூன்று வாரங்களுக்குப் பிறகும் கோழிகள் பச்சை முட்டையிட்டால், எங்களுக்கு கிடைக்கும் இந்த நிகழ்வின் பின்னணியில் சரியான காரணத்தைக் கண்டறிய கூடுதல் ஆய்வுகள் தேவைப்படும் என்று அவர் கூறினார்.
ஷிஹாபுதீன் பண்ணையிலிருந்த இரண்டு கோழிகளுக்கு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட சாதாரண கோழி தீவனத்தை ஹரிகிருஷ்ணனும் அவரது குழுவும் வழங்கி வருகிறார்கள்.