நாட்டில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வாகனத்தையும் போக்குவரத்து துறையில் பதிவு செய்த பிறகு வாகனங்களில் உள்ல நம்பர் ப்ளேட்களில் அந்த பதிவு எண்கள் பதியப்படுகின்றன. ஆனால் ஒரு சில நேரங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் போலி நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்துவதால் அவர்களை பிடிப்பதில் காவல்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு அதனை தவிர்க்க புதுவகை நம்பர் ப்ளேட்களை அறிமுக செய்துள்ளது. High Security Registration Plate ( HSRP) உயர் பாதுகாப்பு நம்பர் ப்ளேட்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
நம்பர் ப்ளேட்டானது அலுமினிய உலோகத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவை வாகனத்தில் இருந்து எளிதில் அகற்ற முடியாதவாறு பொறுத்தப்பட்டிருக்க வேண்டும்.நம்பர் ப்ளேட்டின் இடது புற ஓரத்தில் அசோக சக்கரம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அது நீல நிறத்தில் 20×20 என்ற அளவில் இருக்க வேண்டும். வாகனத்தின் 10 இலக்க எண்கள், லேசர் முறையில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அதே போன்று வாகனம் எந்த வகை எரிபொருளில் இயங்குகிறது என்பதை உணர்த்து வகையில் வண்ணங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
நீல நிறம் : பெட்ரோல், ஆரஞ்ச் நிறம் : டீசல், பச்சை நிறம்: எலக்ட்ரிக் வாகனங்கள்.அரசின் இந்த புதுவகை நம்பர் ப்ளேட்களை அருகே உள்ள போக்குவரத்து அலுவலகங்களில் சென்று பெற்றுக்கொள்ளலாம். அரசு அங்கீகாரம் பெற்ற கடைகளிலும் இந்த நம்பர் ப்ளேட்களை பெற்றுக்கொள்ளலாம். டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் இணையதள பக்கம் செயல்பட்டு வருகிறது.
HSRP நம்பர் ப்ளேட்களின் விலை மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோராயமாக இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.400, 4 சக்கர வானங்களுக்கு ரூ.1,100 வரை ஆகும் என கூறப்படுகிறது.
தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இந்த திட்டம் செயல்பட்டிற்கு கொண்டு வரப்படாத நிலையில் டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இச்சட்டம் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த திட்டம் தமிழகத்தில் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் இவ்வகை நம்பர் ப்ளேட்களை பயன்படுத்தாத வாகனங்களுக்கு தற்போது ரூ.5500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.