டெல்லி:-
இந்திய விமானப்படையை பலப்படுத்தும் வகையில் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் 59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதன்படி முதல் கட்டமாக மே இறுதியில் இந்தியா வரவிருந்த 5 போர் விமானங்கள் கொரோனா பரவல் காரணமாக ஒன்றரை மாதம் கழித்து நேற்று முன்தினம் 5 விமானங்கள் பிரான்ஸின் போர்டியாக்ஸ் நகரிலுள்ள டசால்ட் நிறுவனத்தின் விமானத் தளத்திலிருந்து குரூப் கேப்டன் ஹர்கிரத்சிங் தலைமையில் இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இதற்காக 24 இந்திய விமானிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரான்ஸ் விமானப் படையில் உள்ள ரஃபேல் விமானங்களை ஓட்டி பயிற்சி பெற்றனர். இதைத்தொடர்ந்து 7000 கிலோமீட்டர்கள் பயணம் செய்து இந்த விமானங்கள் ஹரியானாவிலுள்ள அம்பாலா( IAF’s No. 17 Squadron) விமானப்படைத் தளத்தில் இன்று மதியம் தரையிறங்க உள்ளது. அங்கே, ரஃபேல் விமானங்கள் முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்பட உள்ளது.
கடந்த 1997- ம் ஆண்டு ரஷ்யாவின் சுகோய் -30 ரக விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. தற்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு மற்றோரு வெளிநாட்டு போர் விமானமாக ரஃபேல் இந்திய விமானப்படையில் இணைகிறது.
இந்திய விமானப்படை ரஃபேல் விமானங்களை வாங்க முக்கிய காரண கர்த்தாவாக இருந்தவர் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஏர்காமோடர் ஹிலால் அகமது ரதார் .
யார் இந்த ஹிலால் அகமது ரதார்:-
தெற்கு காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்திலுள்ள பக்ஷியாபாத்தை சேர்ந்த ஹிலால். இவரது தந்தை முகமது அப்துல்லா ரதார் ஜம்மு காஷ்மீர் போலீசில் டெபுட்டி சூப்பிரண்டாக (DSP) பணியாற்றியவர். இவர் நக்ரோட்டா சைனிக் பள்ளியில் (Nagrota Sainik School) படித்து பிறகு தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பெற்றவர்.
1988- ம் ஆண்டு இந்திய விமானப்படையில் ஃப்ளைட் லெப்டினென்டாக சேர்ந்த ஹிலால் படிப்படியாக உயர்ந்து 2019- ம் ஆண்டு ஏர்கமோடராக பதவி உயர்வு பெற்றார். ரஃபேல் விமானங்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் பொறுப்பாளராக இவர் பிரான்ஸில் நியமிக்கப்பட்ட இவரின் முயற்சியால்தான், ரஃபேல் விமானங்கள் மிக விரைவில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் அமெரிக்காவில் உள்ள விமானப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி ஆவார்.
இந்திய சூழலுக்கு ஏற்றார் போல ரஃபேல் விமானங்களில் மாற்றம் செய்யவும் ஆயுதங்களை பொருத்துவதில் தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யவும் டசால்ட் நிறுவனத்துக்கு ஹிலால் உதவிக்கரமாக இருந்துள்ளார். போர்டியாக்ஸ் நகரில் இந்த விமானங்கள் வழியனுப்பி வைக்கப்பட்ட நிகழ்வில் பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதருடன் இவரும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக்- 21, மிராஜ் 2000 மற்றும் கிரண் ரக விமானங்களை 3,000 மணி நேரம் ஓட்டிய அனுபவம் பெற்றவர் ஹிலால் அகமது ரதார்.
விங் கமாண்டராக இருந்த போது 2010-ம் ஆண்டு வாயு சேனா பதக்கமும், 2016-ம் ஆண்டு குரூப் கேப்டனாக இருந்த போது விஷிச்த் சேவா பதக்கமும் பெற்றார்.
அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட ரஃபேல் போர் விமானங்களை ஓட்டிய முதல் இந்திய பைலட் இவர்தான். அதற்கு பிறகே இந்திய சூழலுக்கு ஏற்றார் போல மாற்றங்கள் செய்ய டசால்ட் நிறுவனத்துக்கு ஆலோசனை வழங்கினார்.