ஹைதராபாத்:
தெலுங்கானாவில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் பல இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாக ஹைதராபாத்தில் உள்ள வனஸ்தலிபுரம், தம்மாய்குடா, அட்டப்பூர் மெயின் ரோடு, முஷீராபாத் ஆகிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தன. கடுமையாக பாதிக்கப்பட்ட டோலி சவுக்கி பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், அத்தியாவசியமற்ற சேவைகளுக்கு நேற்றும், இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், தெலுங்கானாவின் சில பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளன. அதிகமான மழைப்பொழிவால் ‘ஹிமாயத் சாகர்’ அணை திறந்துவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இதனால் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்தன.ஹைதராபாத்தில் சுமார் 200 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஐதராபாத்தில் அக்டோபர் மாதத்தில் பதிவான மிக மோசமான மழையளவாக கருதப்படுகிறது.
ஐதராபாத்தின் பந்த்லகுடாவில் கனமழை காரணமாக, வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல், ஷம்ஷபாத்தின் ககன்பகாத் பகுதியில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். தெலுங்கானாவில் மழைக்காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.