ஹைதராபாத்:
பிரசவ வலியால் துடித்த நிறை மாத கர்ப்பிணியை, மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக, ஒருவருக்காக மட்டும் சிறப்பு ரயிலை இயக்கிய ஹைதராபாத் ‘மெட்ரோ’ ரயில் நிர்வாகத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில், கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில் கன மழை பெய்தது. இதில் அந்த நகரமே வெள்ளக்காடாக மாறியதால், சாலை போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்ததுப் போனது. இந்நிலையில், கடந்த 14ம் தேதியன்று இரவு,சரியாக 10 மணிக்கு கர்ப்பிணி ஒருவர், விக்டோரியா மெமோரியல் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்தார். பிரசவ வலியால் துடித்த அவர், அங்கிருந்த ஊழியர்களிடம், மியாபூர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றார்.
வழக்கமாக இரவு, 9 மணியுடன், மெட்ரோ ரயில் சேவை முடிவடையும்.கர்ப்பிணியின் நிலையை கருத்தில் கொண்டு உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று, அந்த பிரசவ வலியால் துடித்த பெண்மணி ஒருவருக்காக மட்டும், சிறப்பு ரயிலை மெட்ரோ நிர்வாகம் இயக்கியது.இந்த செயல், பல்வேறு தரப்பிலுமிருந்து பாராட்டுகளை குவிந்து வருகிறது.