மத்திய- மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொளி மூலம் தொடங்கி வைத்த போது நமது நாட்டின் விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவோம் என பிரதமர் மோடி கூறினார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மத்திய- மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொளி மூலம் தொடங்கி வைத்த போது மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அந்த உரையில் மத்திய- மாநில அறிவியல் மாநாடு அனைவரின் முயற்சி என்ற நமது மந்திரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. நமது விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் கொண்டாட வேண்டும். விஞ்ஞானிகளையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் நாம் கொண்டாடும் போது, அறிவியல் நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறும். அரசாங்கத்தின் முயற்சியால், 2015இல் 81வது இடத்தில் இருந்த இந்தியா, உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில், தற்போது 46வது இடத்தைப் பிடித்துள்ளது.
இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்பத்திற்கு விரைவாக தங்களை மாற்றியமைத்து வருகின்றனர். அவர்களை முழு பலத்துடன் ஆதரிக்க வேண்டும். இந்தியாவை உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக மாற்ற வேண்டும். மற்ற மாநிலங்களில் இருந்து சிறந்த நடைமுறைகளை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும். நாட்டில் அறிவியல் சார்ந்த வளர்ச்சித் திட்டங்களை சரியான நேரத்தில் மற்றும் திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கான ஒரு படியாக இது இருக்கும். இவ்வாறு அவர் உரையில் கூறினார்.