மும்பை:-
விவசாயிகளுக்கான இந்தியாவின் முதல் கிஸான் ரயில் இன்று காலை நாசிக்கில் இருந்து துவக்கியது.
இன்று காலை இந்த கிஸான் ரயிலை ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தனர்.
கிஸான் ரயில் துவக்கப்படுவது குறித்து 2020-21 வது பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கின் தேவ்லாலியில் (Deolali) இருந்து பீகார் மாநிலம் தனபூர் (Danapur) பகுதிக்கு இந்த ரயில் சென்றடைகிறது .
கிஸான் ரயிலின் சிறப்பு:-
காய்கறிகள், பழங்கள், பூக்கள் , இறைச்சி, மீன் உள்ளிட்ட விரைவில் வீணாக்க கூடிய பொருட்களின் தடையற்ற விநியோக சங்கிலியை வழங்குவதற்காக ரயில்வே அமைச்சகத்தால் இந்த கிஸான் ரயில் துவக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவசாய பொருட்கள் சேதாரமின்றி கொண்டு செல்லப்படுவதன் மூலமாக விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்.
மொத்தம் 1,519 கி.மீ. தூரத்தை 35 மணி நேரத்தில் சென்றைடைய உள்ளது. இந்த ரயில் வாராந்திர ரயிலாக இயக்கப்பட உள்ளது. தேவ்லாலியில் இருந்து வாரம் தோறும் வெள்ளி காலை 11 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் மறுநாள் மாலை 6.45 மணிக்கு தனபூர்-க்கு சென்றடையும்.
ரயிலில் மொத்தம் 9 பெட்டிகள் முற்றிலும் குளிரூட்டப்பட்டதாக இயக்கப்படுகிறது. இதனால் சாதாரண சரக்கு ரயில்களை காட்டிலும் ஒன்றரை மடங்கு கட்டணம் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த ரயில் பாட்னா,பிரயாக்ராஜ் மற்றும் கட்னி ஆகிய பகுதிகளின் தேவையான , பூக்கள் , இறைச்சி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பூர்த்தி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
தேவலாலி – நாசிக் சாலை, மன்மத், ஜல்கான், பூசாவல், புர்ஹான்பூர், காண்ட்வா, எல்டார்சி, ஜபல்பூர், சட்னா, கட்னி, மணிக்பூர், பிரயாகராஜ் சியோகி, பண்டிட். தீன்தயாள் உபாத்ய நகர் மற்றும் பக்ஸர் ஆகிய பகுதிவழியாக பயணிக்க உள்ளது.