குன்னூர்
முப்படை தளபதி பிபின் ராவத் நேற்று நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற இருந்த ராணுவ பயிற்சி அதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மனைவி மதுலிகா ராவத்துடன் தமிழகம் வந்தார்.
ராணுவ விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்தனர் பின்னர் விமானப்படைக்கு சொந்தமான ‘எம்.ஐ.17 வி 5’ ரக ஹெலிகாப்டர் மூலம் பகல் 11.30 மணிக்கு வெலிங்டன் புறப்பட்டனர்.
இந்த ஹெலிகாப்டரில் பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத், ராணுவ கமாண்டோக்கள் மற்றும் 4 விமானிகள் என 14 பேர் இருந்தனர். ஹெலிகாப்டரை விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுகான் ஓட்டினார்.
இந்த ஹெலிகாப்டர் குன்னூர் பஸ் நிலையத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள காட்டேரி பூங்கா, நஞ்சப்ப சத்திரம் பகுதியில் பகல் 12.05 மணியளவில்சென்றபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை தரையை நோக்கி வந்த ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.
குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் வெலிங்டன் ராணுவ ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளன.
இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, வெலிங்டன் ராணுவ மையத்தில் வைக்கப்படுகிறது.
ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்ததாக விமானப்படை அறிவித்தது.
- பிபின் ராவத் (முப்படை தலைமை தளபதி)
- மதுலிகா ராவத் (பிபின் ராவத் மனைவி)
- பிரிகேடியர் லிட்டர்
- கர்னல் ஹர்ஜிந்தர் சிங்
- குர்சேவக் சிங்
- ஜிதேந்திர குமார்
- விவேக் குமார்
- சாய்தேஜா
- சத்பால்
இந்த விபத்தில் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி பேராசிரியரும், குரூப் கேப்டனுமான வருண் சிங் மட்டும் உயிர் தப்பினார். படுகாயமடைந்துள்ள அவரும் கவலைக்கிடமான முறையில் வெலிங்டன் ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தரைப்படை ராணுவ தளபதி நரவனே, விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்திரி, கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் ஆகியோர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
பின்னர் முழு ராணுவ மரியாதையுடன் 13 பேரின் உடல்களும் சூலூர் விமானப்படை மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து ராணுவ விமானம் மூலம் இன்று டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.
டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், மத்திய மந்திரிகள், அதிகாரிகள் தலைமையில் இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது.
முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட அனைவரின் இறுதிச் சடங்கு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஹெலிகாப்டர் குறித்து தகவல் அறிந்ததும் அது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.