ராஞ்சி:-
ஜார்கண்ட் மாநிலத்தில் இளம்பெண்ணை தலைமுடியை பிடித்து இழுத்து, காவல்துறை அதிகாரி ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் (Sahibganj) மாவட்டத்தில் மஃப்டி உடையில் இருந்த பர்ஹைட் காவல்நிலைய (Barhait Police Station) இன்ஸ்பெக்டர் ஹரிஷ் பதக் 20 வயது இளம்பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து, கன்னத்தில் அறையும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கினர். இது மனிதாபிமானமற்ற செயல் என்றும், கண்டனத்திற்கு உரியது என்றும் மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் காவல் அதிகாரியின் இந்த செயல் முற்றிலும் வெட்கக்கேடானது என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், இது போன்ற செயல்களை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள டிஜிபி எம்.வி. ராவ் (DGP MV Rao):-
சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஷ் பதக் (Harish Pathak) பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அவரது குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
பொலீஸாரின் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் தாயார் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் சில வாரங்களுக்கு முன்னர் தனது மகளின் காதலர் ராமு மண்டல் மற்றும் அவரது தந்தையின் மீது புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக ராமு மண்டலின் தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பிறகு சம்பந்தப்பட்ட பெண்ணை காவல் நிலையம் வந்து விளக்கம் அளிக்குமாறு கூறி உள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கு சென்ற அந்தப் பெண் ராமு தனது காதலன் தான் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஷ் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளில் திட்டி, அவரது தலைமுடியை பிடித்து இழுத்து அறைந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண் சாஹிப்கஞ்ச் மாவட்ட எஸ்பி அனுரஞ்சன் கிஸ்பொட்டோவிற்கு (SP Anuranjan Kispotta) புகார் அளித்துள்ளார். மேலும் பர்ஹைட் தொகுதி ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமன் சோரனின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.