ஜோத்பூர்:-
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மின்னபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பினத்தவரை போலீஸ் ஒருவர் கழுத்து பகுதியை முட்டியால் அழுத்தியதால், அவர் இறந்து போனார். சுமார் 8.46 விநாடிகள் ஜார்ஜ் பிளாயிடின் கழுத்து போலீஸின் முட்டியால் அழுத்தப்பட்டிருந்தது. இதனால், மூச்சுத் திணறி ஜார்ஜ் பிளாயிட் இறந்தார். இந்த மரணத்தையடுத்து, அமெரிக்காவில் பெரும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், அமெரிக்க அரசு தவித்து வருகிறது.
இந்த நிலையில், அதே போன்ற ஒரு சம்பவம் தற்போது இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் முகேஷ் குமார் பிரஜாபத் என்ற இளைஞர் மாஸ்க் அணியாமல் பிரதாப் நகர் பேருந்து நிறுத்தத்தில் நின்று உள்ளார் என்றும் நடந்து சென்று கொண்டிருந்தார் என்றும் இருவேறாக கூறப்படுகிறது.
இதைக் கண்ட இரு போலீஸ்காரர்கள், அவரிடம் ஏன் மாஸ்க் அணியவில்லை என்று கேட்டுள்ளனர். இதனால், போலீஸ்காரருக்கும் முகேஷ்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. அப்போது, போலீஸ் ஒருவர் முகேஷ்குமாரின் கழுத்தில் முட்டியால் அழுத்தியுள்ளார்.
சில நொடிகள் வரை முகேஷ்குமாரின் கழுத்தில் போலீஸ்காரரின் முட்டி இருந்தது. நல்லவேளையாக இளைஞரின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து விளக்கம் அளித்த ஜோத்பூர் போலீஸ் துணை ஆணையர் (மேற்கு) ப்ரீத்தி சந்திரா:-
முகேஷ்குமார் போலீசாரிடம் அத்துமீறி நடந்துள்ளார். கண்களை குத்தி விடுவதாக அவர்களை மிரட்டியுள்ளார். இதையடுத்து, போலீஸ் ஜீப்பை வரவழைத்து அவரை ஜீப்பில் ஏற்ற முயன்றுள்ளனர். அப்போது முகேஷ்குமார் போலீசாரை அறைந்தும் குத்தியும் தாக்கியுள்ளார்.
இதையடுத்து, போலீஸ்காரர் தற்காப்புக்காக அவரை பிடிக்க வேண்டியதாகி விட்டது. தங்கள் பாதுகாப்புக்காக போலீசார் இப்படி நடந்து கொள்வது வாடிக்கை தான். சீருடையில் இருக்கும் போலீசாரை தாக்க முயல்வது சமூகத்தை அவமதிப்பதற்கு சமம்’ என்று அவர் கூறினார்.