உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இருந்து மூன்று ஜோதிர் லிங்கங்களைக் காணும் வசதியுடன் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் சிவனுக்காக ஒரு படுக்கையை ரயில்வே துறை ஒதுக்கியுள்ளது. அதைச் சிறிய கோயிலாகவும் மாற்றியுள்ளனர்.
பிரதமர் மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு இரண்டு நாட்கள் பயணமாகச் சென்றுள்ளார். இந்நிலையில் வாரணாசியில் நேற்று காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் (Kashi Mahakal Express) ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த எக்ஸ்பிரஸ் ரயில், மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் அருகேயுள்ள ஓம்கரேஸ்வர், உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வர், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆகிய மூன்று ஜோதிர் லிங்க தரிசனங்களை காணும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது IRCTC மூலம் தனியாரால் இயக்கப்படும் 3-வது ரயில் என்பது குறிப்பிடதக்கது. உத்தரப் பிரதேசம் வாரணாசியில் புறப்படும் இந்த மஹாகல் எக்ஸ்பிரஸ் லக்னோ வழியாக இந்தூர் வரை சுமார் 1,102 கி.மீ. தூரத்தை 19 மணிநேரம் பயணிக்கிறது.
இந்த ரயில் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும். லக்னோவிலிருந்து இருமுறையும்; அலகாபாத்திலிருந்து வாரத்திற்கு ஒருமுறையும் இயக்கப்படும்.
இந்த ரயிலில் உள்ள B-5 எனும் பெட்டியில் படுக்கை 64-ம் எண்ணைக் கடவுள் சிவனுக்காக முன்பதிவு செய்துள்ளனர். அந்த இருக்கையில் (Upper Berth) யாரும் அமராமல் அந்த இருக்கையைச் சிறிய கோயிலாகவும் உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தீபக் குமார் நிருபர்களிடம் கூறுகையில்:-
“வாரணாசியில் இருந்து இந்தூர் வரை செல்லும் மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் B-5 பெட்டியில் 64-ம் எண் படுக்கையைக் கடவுள் சிவனுக்காக முன்பதிவு செய்துள்ளோம். அந்த இருக்கையில் யாரும் அமரமாட்டார்கள். முதல் முறையாக ரயிலில் சிறிய கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கை கடவுள் சிவனுக்காக உருவாக்கப்பட்டது என்பதைப் பயணிகள் உணர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த இரயில் இயக்கப்படுவது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், AIMIM கட்சி தலைவர் அஸாருதீன் ஓவைஸி அரசியலைமைப்பின் முகவுரையை படத்தை பதிவிட்டு, பிரதமரின் ட்விட்டர் பக்கத்தையும் டேக் செய்துள்ளார்.