கடந்த மார்ச் மாதம் தமிழகத்தை போலவே கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு மே 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
அதில் கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி வெற்றி பெற்றது. இதன் மூலம் கேரளாவில் பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து கடந்த 20 ஆம் தேதி கேரளா மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, இன்று கேரளாவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், கேரள சட்டசபையில் பதவியேற்றுக்கொண்டனர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வெற்றி பெற்ற ஏ.ராஜா என்ற சட்டமன்ற உறுப்பினர் “ஏ. ராஜா ஆகிய நான்” எனக் கூறி தனது தாய்மொழி தமிழில் பதவியேற்றுக்கொண்டார்.
ஏ.ராஜா தமிழக எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டத்தின் தேவிகுளம் என்ற சட்டமன்றத் தொகுதியில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட ஏ.ராஜா தேவிகுளம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.