மஹாராஷ்ட்ர மாநில பள்ளிக் கல்வித் துறைசார்பாக வரும் மார்ச்சில் 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
பொதுவாக பொதுத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் மதிப்பெண் சான்றிதழில் ‘பெயில்’ (Fail) என்று குறிப்பிடும்.
இந்நிலையில், இதை மஹாராஷ்ட்ரா மாநில பள்ளிக் கல்வித் துறை மாற்றி அமைத்துள்ளது.
அதாவது, ‘பெயில்’ என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக மறுத்தேர்வுக்கு தகுதியானவர் (Eligible for Re-exam) என்று மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிடப்படும், என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர் மறுத்தேர்விலும் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்கள் ‘திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு மட்டும் தகுதியானவர்’ என்றும் குறிப்பிடப்பட உள்ளது.
இதேபோல், 12ம் வகுப்பில் மூன்று அல்லது அதற்கு மேல் பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை எனில் அவர்களின் மதிப்பெண் சான்றிதழில் ‘திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு மட்டும் தகுதியானவர்’ என்று குறிப்பிடப்பட உள்ளது.
10 மற்றும் 12ம் வகுப்புக்கு மறுத்தேர்வானது ஜூலை ; ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும்.
இது, தொடர்பாக மஹாராஷ்ட்ர பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் கூறியதாவது:-
தேர்வு பயத்தாலோ அல்லது தேர்வு முடிவுகளுக்கு பயந்தோ ஏற்படும் மனஅழுத்தம் காரணமாக மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்கும் சம்பவங்கள் மிகவும் துரதிருஷ்டவசமானவை. எனவே பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் இருக்கும் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு தேர்வில் தோல்வி அடைந்தால் அவர்கள் வாழ்விலேயே தோல்வி அடைந்து விட்டதாக மாணவர்கள் எண்ணிவிடக் கூடாது. மாணவர்களிடையே நேர்மறை சிந்தனையை வளர்ப்பதற்கும், அவர்களுடைய திறன்களை ஊக்குவிப்பதற்கும், அவர்கள் நம்பிக்கை இழக்காமல் இருப்பதற்கும் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றார்.