மும்பாய்
மும்பாய் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சில மணி நேரம் தங்கி ஓய்வெடுத்து செல்ல நவீன பாட் ஓட்டல் அறைகளை ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே காணொளி மூலம் திறந்து வைத்தார்.
பாட் ஓட்டல்கள் (காப்ஸ்யூல் ஓட்டல்கள்) முதன் முதலாக 1970 ஆண்டுகளில் ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா நகரில் தொடங்கப்பட்டுள்ளது. அதுபோன்று பல்வேறு நாட்டின் ரயில் நிலையங்களில் பாட் ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன.இந்தியாவில் முதன் முறையாக மும்பாய் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பாட் ஓட்டலில் மொத்தம் 48 அறைகள் உள்ளன. பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனி அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. சொகுசான படுக்கைகளுடன் தொலைக்காட்சி பெட்டியுடன் அனைத்து இணைய சேவை வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
அதுபோன்று மொபைல் போன் சார்ஜர் பாதுகாப்பு பெட்டகம் புத்தகம் படிக்கும் விளக்கு ஆகியவைகளும் பொருத்தப்பட்டுள்ளது. பாட் ஓட்டலில் தங்குபவர்களுக்கு பொதுவான கழிப்பிடம் மற்றும் குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது. பாட் ஓட்டலில் தங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலியை இலவசமாக வழங்கப்படுகிறது.
பாட் ஓட்டலில் தங்குவதற்காக 12 மணி நேரத்திற்கு ரூபாய் 999 ம் 24 மணி நேரத்திற்கு ரூபாய் 1999 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.