டெல்லி:-
4 வயது பெண் குழந்தையை கடத்த முயன்றவர்களை குழந்தையின் தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் சேர்ந்து, சினிமா பாணியில் தடுத்த குழந்தையை காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லியின் ஷாகர்பூர் பகுதியில் உள்ள வீட்டிற்கு வந்த இருவர் தங்களை சேல்ஸ்மேன் என அடையாளப்படுத்திக் கொண்டு தண்ணீர் கேட்டுள்ளனர். இதையடுத்து அந்த பெண் உள்ளே சென்றதும், வாசலில் இருந்த குழந்தையை அவர்கள் கடத்த முயன்றுள்ளனர். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து ஓடிவந்த பெண், கடத்தல்காரர்களின் பைக்கை கீழே தள்ளி தனது குழந்தையை அவர்களிடமிருந்து பிடுங்கியுள்ளார்.
அதைத்தொடர்ந்து அந்த கடத்தல்காரர்களில் ஒருவன் ஓடத் தொடங்குகின்றனர். அப்போது, அப்பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கடத்தல்காரர்களை பிடிக்க பின்னால் ஓடுகிறார்.
கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்ப முயன்றபோது, இந்த சம்பவத்தை கவனித்த மற்றொருவர், அருகே இருந்த பைக்கை சாலையின் நடுவே நிறுத்தி கடத்தல்காரன் வந்த பைக்கை கீழே தள்ளியுள்ளார். ஆனால், அவரை உதறி தள்ளிவிட்டு கடத்தல்காரர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மாலை 4 மணியளவில் நடைபெற்றுள்ளது.
கடத்தல்காரர்கள் இருவரும் விட்டுச்சென்ற பையில் துப்பாக்கி மற்றும் சில தோட்டாக்கள் இருந்துள்ளன.
சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றியதாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மோட்டார் சைக்கிளில் மாட்டப்பட்டது போலி நம்பர் பிளேட் என்பதை போலீஸார் கண்டறிந்தனர். இதனையடுத்து கிருஷ்ணா நகர் பகுதியில் உபேந்தர் என்பவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட உபேந்தர் குழந்தையின் மாமா என்பது தெரியவந்தது.
தனது சகோதரியின் மகளை கடத்தி சகோதரியிடம் இருந்து 35 லட்சம் வரை பணம் பறிக்க இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளான் உபேந்தர் என்று போலீசார் தெரிவித்தனர்.