இந்தூர்:-
இந்தூரில் மார்க்கெட் பகுதி அருகே நடைபாதையில் வசித்து வந்த தொழிலாளியின் மகள் பத்தாம் வகுப்பு தேர்வில் 68 சதவீதம் மதிப்பெண் பெற்றதற்காக இந்தூர் மாநகராட்சி ஒரு வீட்டை பரிசாக அளித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சிவாஜி மார்க்கெட் பகுதியில் வசித்து வரும் தினசரி கூலித் தொழிலாளியாக பணிபுரியும் தஷ்ரத் கண்டேகருக்கருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வரும் கண்டேகரின் மகள் பாரதி கண்டேகர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 68 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
நடைபாதையில் வசித்து வரும் கூலித் தொழிலாளி ஒருவரின் மகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 68 சதவீத மதிப்பெண்கள் பெற்றது குறித்து கேள்விப்பட்ட இந்தூர் மாநகராட்சி ஆணையர் பார்த்திப பால் உடனடியாக அவர்களுக்கு வீடு வழங்க உத்தரவிட்டார்.
இதையடுத்து கண்டேகர் குடும்பத்தினருக்கு 1BHK வீடு வழங்கப்பட்டது. இந்த தகவலை நகர பொறியாளர் மகேஷ் வர்மா கண்டேகர் குடும்பத்தினரும் தெரிவித்தார். மாநகராட்சி ஆணையர் பார்த்திப பால் சிறுமி பாரதி கண்டேகருக்கு டேபிள், சேர், புத்தகங்கள், புது ஆடைகள் ஆகியவற்றையும் வழங்கினார். மேலும் சிறுமி இலவசமாக மேற்படிப்பு பெறுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.
இதுகுறித்து பாரதி காண்டேகர் கூறுகையில்:-
என்னை பள்ளிக்கு அனுப்ப கடினமாக உழைத்த என் பெற்றோருக்கு எனது வெற்றியின் பெருமை உண்டு. நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆக விரும்புகிறேன். நாங்கள் நடைபாதையில் பிறந்து அங்கு தான் வாழ்ந்தோம். நாங்கள் வாழ ஒரு வீடு இல்லை, நாங்கள் நடைபாதையில் தங்கியிருந்தோம். தற்போது இந்த வீட்டை எனக்கு பரிசாக வழங்கிய மாநகராட்சி நிர்வாகத்துக்கு நன்றி. மேலும் நான் கல்வி கற்க இலவசமாக்கியதற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று பாரதி கூறினார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை தஷ்ரத் கண்டேகர் கூறுகையில்:-
நானும் என் மனைவியும் தினசரி கூலித் தொழிலாளர்கள். நான் பள்ளி சென்று படித்ததில்லை. எனவே எங்களது குழந்தைகளாவது நன்றாக படிக்க வேண்டும் என்று அவர்களைப் படிக்க வைத்து வருகிறோம். தற்போது என் மகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றாள். என் மகள் தேர்வில் தேர்ச்சி பெற்றதால் வீடு பரிசளிக்கப்பட்டது என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.