தோனி…. சமீபகாலமாக அடிக்கடி கிரிக்கெட் போட்டிகளின் போது ஒலிக்கும் பெயர்… மீண்டும் எப்போது விளையாட வருவார்… அவரின் கீப்பிங் ஸ்டைலை இப்போது நாம் பார்க்கப் போகிறோம் என ஒவ்வொரு ரசிகரும் காத்திருக்க தோனியோ இந்திய அணிக்குள் வந்து இன்றோடு 15 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.
2004 ஆம் ஆண்டு இதே டிசம்பர் 23ஆம் தேதி வங்காளதேசத்திற்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் மகேந்திர சிங் தோனி. வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் இந்த போட்டியில் ஆறாவது வீரராக களம் இறங்கிய தோனியோ ரன் எதுவும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் தோல்வி வெற்றிக்கான அறிகுறி என்பதை போல் அடுத்ததாக நடந்த பாகிஸ்தான் தொடரை தன் ஆட்டத்தின் அடையாளமாக மாற்றினார். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசித் தள்ளி 183 ரன்கள் குவித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக அந்த போட்டியில் அசத்தினார். அதன் பிறகு மூன்றாண்டுகள் அவ்வப்போது அவரது பேட்டிங் திறமைகள் வெளிப்பட்டன.
இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று அப்போதைய கேப்டன் ராகுல் டிராவிட் பதவி விலக அடுத்த கேப்டனாக தோனி பொறுப்பேற்றார். அந்த சமயம் இந்தியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி முதன்முதலாக நடத்தப்பட்டது. அதில் தோனி தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட குழு களமிறங்கி முதல் உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அதன் பிறகு தோனி தலைமையேற்கும் போட்டியில் பெரும்பாலும் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனைகளை படைத்தது.
இதன் பிறகு 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டது. இந்த கோப்பையை கண்டிப்பாக வென்று சச்சின் டெண்டுல்கருக்கு சமர்ப்பிப்போம் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி இறுதிப்போட்டியில் இலங்கையுடன் மோதி இதே தோனியின் அசாத்திய சிக்சரால் 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை கைப்பற்றியது. அதேபோல் ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றி மூன்று வகையான உலக கோப்பை போட்டியை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான தோனி.
தோனி எப்போதுமே ரசிகர்களால் ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்படுவார். காரணம் களத்தில் பொறுமையாக நின்றால் வெற்றி நம்மை தேடி வரும் என்பதற்கேற்ப அவரை தேடி வெற்றிகள் வந்தன. அவர் கீப்பிங் செய்யும்போது பேட்ஸ்மேன்கள் கிரீஸை விட்டு வெளியேறினால் அவ்வளவுதான். ஒலியின் வேகத்தை விட அவரின் ஸ்டம்பிங் வேகம் அதிகமானது. இதேபோல் ஐபிஎல் போட்டிகளிலும் 2008 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்துவரும் தோனி தலைமையிலான அணி இதுவரை மூன்று முறை கோப்பையை கைப்பற்றி உள்ளது.
2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் தோல்விக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து நான்காண்டுகள் அணியின் பேட்ஸ்மேன் ஆகவும் விக்கெட் கீப்பர் ஆகவும் திகழ்ந்த தோனி இந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவர் நிச்சயம் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இந்திய அணியின் நிலைமை மாறி மீண்டும் கோப்பையை கைப்பற்ற நமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும்.
இதன்பிறகு கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்துக்கொண்டு தோனி தற்போது ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்து வருகிறார். அவர் மீண்டும் இந்திய அணியில் விளையாட வேண்டும் என ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர். ஆனால் தோனியும் ஜனவரி வரை என்னிடம் எதையும் கேட்காதீர்கள் என்று வெளிப்படையாகவே கூறி விட்டார். 38 வயதான தோனி இதுவரை 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,773 ரன்களும், 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,432 ரன்களும், 98 டி20 போட்டிகளில் விளையாடி 1617 ரன்களும் எடுத்துள்ளார். அதேபோல் இவரது விக்கெட் கீப்பிங் பணியில் இதுவரை 829 பேரை அவுட் செய்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் தோனி கிரிக்கெட்டுக்கு உள்நுழைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தோனியை பெருமைப்படுத்தும் வகையில் அவரது வாழ்க்கை வரலாறு ‘ dhoni – the untold story’ என்ற திரைப்படம் இந்தியில் எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.