பெங்களூரு:-
பெங்களூரு நகரின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1:25 மணியளவில் காதைப் பிளக்கும் பயங்கர “பூம்” சப்தத்தை கேட்ட மக்கள் நில நடுக்கம் வந்து விட்டதோ என்று அஞ்சி நாலாபுறமும் சிதறி ஓடினர்.
குக்கி டவுன், விவேக் நகர், ராமமூர்த்தி நகர், ஒசூர் சாலை, எச்ஏஎல், பழைய மெட்ராஸ் சாலை, உல்சூர், குந்தனஹள்ளி, கமனஹள்ளி, சிவி ராமன் நகர், ஓயிட்பீல்ட் மற்றும் எச்எஸ்ஆர் லேஅவுட் போன்ற பகுதிகளில் இந்த சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.
நகரின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் அலையடித்த இந்த சப்தத்தால் கட்டிடங்களும், வீடுகளில் இருந்த ஜன்னல்களும் குலுங்கின. இதனால் மக்கள் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அஞ்சினார்கள். ஆனால் அவர் நிலநடுக்கம் ஏற்படவில்லை என்று இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக கர்நாடக இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தின் இயக்குநர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி ட்விட்டரில் கொடுத்துள்ள விளக்கத்தில்:-
நிலநடுக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் வராது. அது பரந்துபட்ட இடத்தில் ஏற்படும். எங்கள் சென்சார்களை நாங்கள் நன்றாக பரிசோதித்துவிட்டோம். அதிலிருந்து நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான எந்த தரவுகளும் இல்லை,” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் சார்பில் நிலநடுக்கத்தால் இன்று பெங்களூருவில் சத்தம் கேட்கவில்லை. அது குறித்து எந்த தரவுகளும் கிடைக்கவில்லை. இது ஒரு மிகப் பெரிய சத்தம் மட்டுமே என்று கூறியுள்ளது.
போர்ப் படை சூப்பர் சானிக் விமானங்கள் மூலம் இந்த சத்தம் கேட்டிருக்கும் என்று பல என சிலர் கூறினார்கள்.
இதனிடையே பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் கூறுகையில்:-
விமானப் படை கட்டுப்பாட்டு அறையிடம், சத்தம் ஏற்பட்டதற்குக் காரணம் ஜெட் அல்லது சூப்பர் சோனிக் சத்தத்தினாலா என்று கேட்டுள்ளோம். விமானப் படையிடமிருந்து வரும் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்றுள்ளார்.
மாநில பேரிடர் மேலாண்மை மையத்தை சேர்ந்த வல்லுநர் ஒருவர் கூறுகையில்:-
மிகப்பெரிய வெற்றிடம் உருவாகி பின்னர் புயல் வேக காற்று உள் நுழையும் போது வித்தியாசமான சத்தம் கேட்கும்.
அதாவது வெப்பமான மற்றும் குளிர்ச்சியான காற்றின் மோதல் என்று கூறலாம். புயல் உருவாகும் காலங்களில் தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ வாய்ப்புண்டு என்றார். பெங்களூருவில் இன்று பிற்பகல் கேட்ட சத்தத்தை ஒரு வளிமண்டல நிகழ்வு என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆனால் அந்த பயங்கர சப்தம் எங்கிருந்து வந்தது என தெரியாமல் விழித்த மக்களுக்கு விடை கிடைத்தது.
நமது விமானப்படையின் சூப்பர்சோனிக் சுகோய் 30 போர் விமானங்கள் பெங்களூருவின் வான் வெளியில் ஒலியின் வேகத்தை விடவும் அதிக வேகத்தில் பறந்ததால் ஏற்பட்ட சத்தமே அது.
இதுகுறித்து ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) கூறுகையில்:-
Sukhoi 30 சூப்பர்சோனிக் போர் விமானம் ரன்வேயிலிருந்து டேக்ஆஃப் ஏற்பட்ட சப்தமே இது. போர் விமானங்கள் 90 டிகிரி அளவிற்கு டேக் ஆஃப் ஆகும் பொழுது மிகப்பெரிய அளவில் ஒலியை உண்டாக்கும். இந்த ஒலியை கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கேட்கமுடியும் என்று HAL விளக்கியுள்ளது.