புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நான்காவது முறையாக முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி பதிவியேற்றார். துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ரங்கசாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதியதாக 10 ஆயிரம் பேருக்கு முதியோர், விதவை பென்ஷன் வழங்க கையெழுத்திட்டார்.
30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15வது சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இதனையடுத்து இந்த கூட்டணியின் தலைவராக இருந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமியை, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் ஒருமனதாக சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதனை தொடர்ந்து ஆட்சியமைக்க உரிமை கோரும் கடித்ததை கடந்த மே 3ஆம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம், ரங்கசாமி வழங்கினார்.
இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15-வது சட்டப்பேரவைக்கான முதலமைச்சர் பதவியை ரங்கசாமி ஏற்றார். துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ரங்கசாமிக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
புதுச்சேரியில் 2001, 2006 காங்கிரஸ் ஆட்சியில் இரண்டு முறை முதலமைச்சராக பதவி வகித்த ரங்கசாமி. கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து பிரிந்து 2011 ஆம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கிய, இரண்டே மாதத்தில் முதலமைச்சரானார். தொடர்ந்து தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலம் மீண்டும் நான்காவது முறையாக முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்ற பின்னர் சட்டப்பேரவைக்கு வந்த முதலமைச்சர் ரங்கசாமி நிலுவையில் உள்ள 2 மாதத்திற்கான அரிசி வழங்குவது, 10 ஆயிரம் நபர்களுக்கு புதிதாக முதியோர், விதவை பென்ஷன் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான செண்டாக் பணம் வழங்கும் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார்.