மும்பை:-
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் பெண் தேர்தல் ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற நீலா சத்யநாராயணா (72) இன்று கொரோனா பலியானார்.
கொரோனா தொற்று காரணமாக மும்பை அந்தேரி பகுதியில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்தார். நீலா சத்யநாராயணாவிற்கு ஒருமகனும், மகளும் உண்டு.
யார் இந்த நீலா சத்யநாராயணா???
ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. பட்டதாரியான நீலா சத்யநாராயணா 1972ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் இணைந்தார்.
ஆங்கிலம், இந்தி, மராட்டி ஆகிய மூன்று மொழிகளிலும் புலமை வாய்ந்தவர். இந்தியிலும், மராட்டியிலும் 150க்கும் அதிகமான பாடல்களை எழுதி இசையமைத்திருக்கிறார். இதில் இரண்டு பாலிவுட் திரைப்படங்களும் அடங்கும். சமுதாயத்தில் நலிவுற்றவர்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிக்கும் பரம ஏழை மக்களுக்கெல்லாம் பல உதவியை செய்திருக்கிறார்.
இவரது குடும்ப வாழ்க்கையே மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாகத்தான் அமைந்துள்ளது. இவருக்கு இரண்டு குழந்தைகள். ஒரு மகள், ஒரு மகன். மூத்த பெண் ஒரு உளவியல் மருத்துவர். இரண்டாவது மகன் உளரீதியில் பாதிக்கப்பட்டவர்.
இவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம்:-
தனது மகனுக்கு உள்ள டவுன் சிண்ட்ரோம் குறைபாட்டை பின்னணியாக வைத்து இவர் உருவாக்கியுள்ள படைப்புதான் ஒன் ஃபுல், ஒன் ஹாஃப் இது இவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் ஆகும். இவரின் சொந்த வாழ்வில் எத்தனையோ சோகம் இருந்தாலும் தனது அரசுப் பணியைத் திறம்பட இவர் நிறைவேற்றினார். நாக்பூரில் துணை கலெக்டர், பிவண்டியில் ஸப் டிவிஷனல் அதிகாரி, தானேயில் அடிஷனல் கலெக்டர், தானே கலெக்டர் என்று பல பதவிகளை வகித்துள்ளார்.
இவர் இதுவரை 23 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ரவுன் (Rounn) என்ற மராத்திய நாவலைத் தழுவி ஜட்ஜ்மெண்ட் (Judgement) என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது.
நீலா சத்தியநாராயணா பெற்ற விருதுகள்:-
இவரது திறமையான பணிக்காக பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். இந்தி மொழி பேசாத எழுத்தாளர்களுக்கான இந்திய அரசாங்க விருது, கர்நாடகா மாநிலத்தின் மகாத்மா காந்தி விருது, ஆசீர்வாத் விருது, ஸ்த்ரீ சக்தி விருது, சென்ற ஆண்டில் வழங்கப்பட்ட மகாராஷ்டிரா அரசின் ஸ்த்ரீ கௌரவ் விருது, மும்பையில் FICCIயின் கோல்டன் மகாராஷ்ட்ரா விருது என்று பல விருதுகளை வென்றுள்ளார்.
மராட்டியத்தின் முதல் பெண் தேர்தல் ஆணையர்:-
கடந்த 2009ஆம் ஆண்டு மராட்டிய மாநிலத்தின் முதல் பெண் தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வருவாய்துறையில் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றிய இவர் ஜூலை/5/ 2014-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பின்னர் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார். 42 ஆண்டுகள் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி பல சாதனைகளை புரிந்துள்ளார். ஐஏஎஸ் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின் மகாராஷ்டிரா மாநில தேர்தல் ஆணையர் பதவியை அலங்கரித்தார். தலைமைத்தேர்தல் அதிகாரியாக இருந்தபோது அரசியல் ரீதியாக வந்த எத்தனையோ சவால்களை சமாளித்து திறம்பட பணியாற்றியுள்ளார்.
இவரது மறைவுக்கு மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பல்வேறு கட்சி அரசியல் கட்சித்தலைவர்களும், சுப்ரியா சுலே உட்பட பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.