டெல்லி:-
கடவுள் ராமர் இந்தியர் அல்ல; அவர் ஒரு நேபாளி என்று நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கூறியதையடுத்து காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி அவரைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது:-
பகவான் ராமர் இந்தியர் அல்ல அவர் ஒரு நேபாளி. உண்மையான அயோத்தி நேபாளதில் நேபாளத்தின் மேற்கு பிர்குஞ்ச் (West Birgunj) மாவட்டத்தின் தோரி (Thori) அருகேயுள்ள அயோத்தியில், ராமர் நேபாளத்தில் பிறந்தவர். வால்மீகி ஆஸ்ரமம் நேபாளத்தில் உள்ளது, தசரத மகாசக்ரவர்த்தி புத்திர காமேஷ்டி யாகம் செய்த இடம் நேபாளில் உள்ளது என்று சர்மா ஒலி சரமாரியாகப் பேசியுள்ளார்.
அதே போல் ஜனக்புரி நேபாளில் உள்ளது. அயோத்தி அங்கே உள்ளது என்றால் தகவல் தொடர்புச் சாதனங்கள் இல்லாத அந்தக் காலத்தில் ராமர் சீதையை அங்கிருந்து வந்து எப்படி மணந்திருக்க முடியும்? எனவே ராமர் இங்குதான் பிறந்துள்ளார், என்று நேபாளத்துக்குரியதாக்கிப் பேசினார் சர்மா ஒலி.
மேலும் இந்தியா ‘போலி அயோத்தியை உருவாக்கி’ பண்பாட்டு ஆதிக்கம் செலுத்துகிறது என்றும் கடும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார்.
இதற்குப் பதிலடி அளிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில்:-
நேபாளப் பிரதமர் ஒலியின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. அவர் சீனாவின் கைப்பாவையாகி (Puppet) விட்டாரா அல்லது சீனா எழுதிக் கொடுத்ததை திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளை போல் பேசுகிறாரா?. முதலில் நேபாளம் இதுவரை கோராத இந்திய பகுதிகளை தங்களுடையது என்று கோரினார். இப்போது ராமர், சீதை, ராமராஜ்ஜியத்தை நேபாளுக்குரியது என்கிறார் என்று அபிஷேக் மனு சிங்வி கடும் விமர்சனம் செய்துள்ளார்.