ATM-ல் ரூ.5000க்கு மேல் பணம் எடுத்தால் மினிமம் கட்டணம் வசூலிக்க இந்திய ரிசர்வ் வங்கி குழு பரிந்துரைத்துள்ளது.
தற்போது இருக்கும் நடைமுறையின் படி, ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் வேறு வங்கியின் ATM-ல் பணம் எடுத்தால் ரூ.24 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த கட்டணம் வங்கிகளை பொறுத்து மாறுபடும். அதே போல, இத்தனை முறை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம், அதன் பிறகு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என வங்கிகள் அறிவுறுத்தியிருக்கின்றன. இந்த நிலையில், ரூ.5,000க்கு மேல் பணம் எடுத்தாலே கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வர உள்ளது.
அதாவது, இந்த முறையின் படி வாடிக்கையாளர்கள் 5 முறை இலவசமாக ATM-ல் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம்.6-வது முறையாக பணம் எடுக்கும் போது கட்டணம் வசூலிக்கப்படுமாம். குறிப்பாக ரூ.5000க்கு மேல் எடுத்தால் மட்டுமே இந்த கட்டணம் வசூலிப்பு பொருந்தும். இது தொடர்பான பரிந்துரையை இந்திய ரிசர்வ் வங்கி குழு பரிந்துரைத்திருப்பதாகவும் 8 ஆண்டுகளுக்கு பிறகு ATM கட்டணம் முறை மாற்றப்படவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ATM பயன்படுத்தும் பெரும்பாலான மக்கள் குறைவான பணத்தையே எடுப்பதால், ரூ.5,000க்கு மேல் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்க இந்த குழு பரிந்துரைத்திருக்கிறது. அதோடு, சிறிய நகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 6 முறை வரையில் ரூ.5,000க்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படாது என்ற சலுகையையும் பரிந்துரைத்திருக்கிறது.
ஏற்கனவே மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் 4ஆவது முறையாக வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.