இந்திய அளவில்சிறந்த சுகாதாரத்துறையாக தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது. இப்பட்டியலில் கேரளா முதலிடத்திலும், உத்தரப்பிரதேசம் கடைசி இடமும் பிடித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிதி ஆயோக் சார்பில், நாட்டில் பொது சுகாதாரம், வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் குடிநீர், பாலின சமநிலை, ஒட்டுமொத்த செயல்பாடுகள் என்பன உள்ளிட்ட தலைப்புகளில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, 2019-20ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறையின் நிலை குறித்து கணக்கிட்டு தரவரிசை பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.
மொத்தம் 24 காரணிகளை மதிப்பீடு செய்து, நிதி ஆயோக், மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகம் ஆகியவை இணைந்து இத்தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில், தமிழகம் 72.42 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 82.20 புள்ளிகளுடன் கேரளா முதலிடத்தை பெற்றுள்ளது.
இப்பட்டியலில் தெலுங்கானா 3வது இடத்தையும், ஆந்திரா 4வது இடத்தையும் பிடித்தன. பா.ஜ. ஆளும் மாநிலங்களான குஜராத் 6வது, கர்நாடகா 9வது இடத்தையும் பெற்றுள்ளன. உத்தர பிரதேசம் 30.57 புள்ளிகளுடன் கடைசி இடம் (19வது இடம்) பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.