பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள் ஆனால் இங்கே ஒருவர் தன்னைக் கடித்த விஷப் பாம்பை, கடித்தேக் கொன்று பழிக்கு பழிவாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் தனகாடி அருகே சாலிஜங்கா பஞ்சாயத்துக்குட்பட்ட கம்பாரிபாடியா என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் கிஷோர் பத்ரா. இவர் வழக்கம்போல இரவு நேரத்தில் வயலில் வேலைப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
இரவு நேரம் என்பதால் கையில் டார்ச் லைட்டுடன் வந்துகொண்டிருந்த போது அவர் காலில் ஏதோ கடித்தது போல இருந்தது. உடனே டார்ச் லைட்டை அடித்துப் பார்த்தார். அப்போது பாம்பு ஒன்று அவரை கடித்துவிட்டு வேகமாக ஓடியது.
கடும் கோபமுற்ற அவர் அதை விரட்டி, கம்பால் அமுக்கிப் பிடித்தார். அது விஷபாம்பு என்பது தெரியவந்தது.
உடனடியாக ’என்னையாவா கடிச்ச ? உன்னைய என்ன பண்றேன் பார் என்று ஆத்திரம் தீர பலமுறை அந்த பாம்பை கடித்து கொன்றுவிட்டார்.
வீட்டுக்கு வந்ததும் மனைவியிடம் விஷயத்தை கூறியுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று காண்பிக்குமாறு கூறினர்.
ஆனால் அவர் போக மறுத்து நாட்டு வைத்தியரைச் சந்தித்து மருந்து வாங்கினாராம். நல்லவேளையாக அவருக்கு ஏதும் ஆகவில்லை.
பாம்பிடம் கடி வாங்கிய நபர், பாம்பை கடித்து கொன்ற சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.