ஆண்டிகுவா:-
இந்தியாவால் தேடப்படும் வங்கி மோசடி குற்றவாளி மெகுல் சோக்ஸி டோமினிகா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு ஆண்டிகுவா பார்புடா திரும்பியுள்ளார்.
இந்திய வங்கிகளில் 13,500 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்து இந்தியாவில் இருந்து தப்பிய வைர வியாபாரி மெகுல் சோக்ஸி ஆண்டிகுவாவில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வசித்து வருகிறார். அவர் செய்த வங்கி மோசடிக்காக இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, ஆண்டிகுவா அருகில் உள்ள டோமினிகா தீவில் சட்ட விரோதமாக நுழைந்ததாக கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு நரம்பியல் மருத்துவம் பார்ப்பதற்காக டோமினிகா நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. மேலும், இந்திய மதிப்பில் சுமார் 2.50 லட்சம் ரூபாய் பிணை தொகை செலுத்திய பின்னர் அவர் தற்போது மீண்டும் ஆண்டிகுவா திரும்பியுள்ளார்.
மெகுல் சோக்ஸி ஆண்டிகுவா திரும்பியுள்ளதால் இந்தியாவிற்கு கொண்டுவர மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.