புதுடெல்லி:-
நேபாளத்தில் தொடர்ந்து பாகிஸ்தானும் இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் இந்தியாவின் ஜம்மு&காஷ்மீர், லடாக், ஜூனாகத் உட்பட குஜராத்தின் சில பகுதிகள் மற்றும் சர் க்ரீக் (Sir Creek) நதி ஆகிதவற்றை இணைத்து வெளியிட்டுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த புதிய வரைபடத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக ஜம்மு காஷ்மீர் பகுதி முழுவதுமாக இந்த வரைபடத்தில் இணைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த வரைபடம் பாகிஸ்தான் முழுவதும் விநியோகிக்கவும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதோடு இஸ்லாமாபாத் நெடுஞ்சாலையை ஸ்ரீநகர் நெடுஞ்சாலை என்று பெயர் மாற்றுவதற்கும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னர் இந்த நெடுஞ்சாலை காஷ்மீர் நெடுஞ்சாலை என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
இந்த புதிய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் பகுதியை இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பகுதி என்று குறிப்பிட்டுள்ளது பாகிஸ்தான் அரசு. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக இந்திய அரசு பிரித்து இன்றோடு ஓராண்டு ஆகிறது. இந்நிலையில்தான் பாகிஸ்தான் அரசு இதுபோன்ற புதிய வரைபடத்தை வெளியிட்டு உள்ளது.
இதனிடையே ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை ஐநா சபையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஆசைப் படுகிறோம் ராணுவ ரீதியாக அல்ல பாகிஸ்தான் ஒருபோதும் ராணுவ ரீதியாக அல்லாமல் அரசியல் நகர்வு மூலமாகவே ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க உள்ளோம் என்று கூறினார்.
இது குறித்து இந்தியா தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. அதோடு பாகிஸ்தானின் இந்த புதிய வரைபடத்தை சுத்த அபத்தம் என்றும் விவரித்துள்ளது.
பாகிஸ்தான் இதுபோன்று வரை படங்களை வெளியிடுவது முதன் முறை அல்ல பல முறை இதுபோன்ற வரை படங்களை வெளியிட்டுள்ளது கடைசியாக கடந்த 2012 ஆம் ஆண்டு குஜராத்தில் ஜுனாகத் பகுதியை இணைத்து வரைபடம் ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் மட்டுமல்லாது அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டின் வளர்ச்சியில், தங்கள் மக்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்துவதை விட்டுவிட்டு இதுபோன்று புதிய வரைபடங்களை உருவாக்கி வினியோகம் செய்வதில் எந்தவித பயனும் விளையப்போவதில்லை. ஏற்கனவே பாகிஸ்தான் பொருளாதாரம் அதள பாதாளத்தில் உள்ளது. அதை சரி செய்வதை விட்டுவிட்டு தேவையற்ற விஷயங்களில் பாகிஸ்தான் கவனம் செலுத்தாமல் இருப்பதே அதற்கு நல்லது.