மும்பை:
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவங்களைக் கொடுக்க எந்த தூரத்திற்கும் செல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படியான ஒரு சம்பவம் தான் இது.
செல்வமும் சங்கீதாவும் தங்கள் இருசக்கர வாகனத்தில் மும்பையில் இருந்து புதுக்கோட்டை வரை 1,400 கி.மீ பயணம் செய்து, தங்கள் 6 வயது மகனின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.திருமணமானதில் இருந்து மும்பையின் சியோன் பகுதியில் வசித்து வரும் இந்த தம்பதியினர், தங்கள் இரு குழந்தைகளையும், விடுமுறையைக் கழிப்பதற்காக புதுக்கோட்டையில் உள்ள சங்கீதாவின் பெற்றோருடைய வீட்டில் விட்டுள்ளனர்.
பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக விரைவில் திரும்புவதாக உறுதியளித்திருந்தனர்.ஆனால் அதற்குள் ஊரடங்கு தொடங்கிவிட்டது.இந்த சமயத்தில் தான் தங்கள் குழந்தைகளை காண இருசக்கர வாகனத்திலேயே பயணம் செய்யலாம் என இத்தம்பதியினர்,முடிவெடுத்து பயணம் மேற்கொண்டனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது,
“நான் என் குழந்தைகளிடமிருந்து ஏழு நாட்கள் கூட பிரிந்திருந்தது இல்லை. இப்போது ஏழு மாதங்கள் ஆகின்றன.மேலும்,எனது மகன் யோகேஷ்வரின் 6-வது பிறந்தநாளுக்காக அங்கு இருப்பதன் மூலம் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முடிவு செய்தோம்.” எனத் தெரிவித்தார்.
திருச்சிக்கு இன்னும் ரயில்கள் இல்லாத சூழலில், விமானக் கட்டணம் பல மடங்கு இருப்பதாலும்,இத்தம்பதியினர் தங்கள் ஸ்கூட்டரான ‘ஆக்டிவா’வில் நெடுஞ்சாலையில் செல்ல முடிவு செய்தனர்.1,400 கி.மீ தூரம் செல்ல அவர்களுக்கு 37 மணி நேரம் பிடித்தது.
“நாங்கள் 1-ஆம் நாள் கோலாப்பூரிலும், 2-ஆம் நாள் பெங்களூரிலும் நிறுத்தினோம். செலவுகளைக் குறைக்க நாங்கள் லாட்ஜ்களில் தங்கினோம். பெங்களூரில், சுமூகமான பயணத்தை உறுதி செய்ய பைக்கை சர்வீஸ் செய்ய வேண்டியிருந்தது. முதல் நாளில் நாங்கள் 3,00 கி.மீ,அடுத்தடுத்த நாட்களில் 800 கி.மீ மற்றும் 398 கி.மீ. தூரம் சென்றோம்.” என தெரிவித்தனர்.மேலும் முழு பயணத்திற்கும் அவர்களுக்கு 7,000 ரூபாய் செலவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.