பீகாரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளியின் மூளையில் இருந்து கிரிக்கெட் பந்து அளவிலான கருப்பு பூஞ்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
பாட்னா அருகிலுள்ள ஜமுயியைச் சேர்ந்த அனில் குமார் (60) என்பவரின் தலையிலிருந்து தான் கிரிக்கெட் பந்து அளவிலான கருப்பு பூஞ்சை அகற்றப்பட்டது.
அனில் குமார் சமீபத்தில்தான் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அடிக்கடி தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் போன்ற பாதிப்புகளால் அவர் அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (ஐஜிஐஎம்எஸ்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனில்குமாரின் மூளையில் மியூகோமிகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து டாக்டர் பிரஜேஷ் குமார் தலைமையிலான மருத்துவக்குழு 3 மணிநேரம் இந்த அறுவை சிகிச்சை செய்து அனில்குமாரின் மூளையில் இருந்து கருப்பு பூஞ்சையை வெற்றிகரமாக அகற்றினர்.
அகற்றப்பட்ட கருப்பு பூஞ்சையின் அளவு கிட்டத்தட்ட கிரிக்கெட் பந்துக்கு சமமானது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஐ.ஜி.ஐ.எம்.எஸ்ஸின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் மனிஷ் மண்டல் கூறுகையில்,
கருப்பு பூஞ்சை மூக்கு வழியாக குமாரின் மூளைக்குள் நுழைந்தது, ஆனால் அவரது கண்களுக்கு பரவவில்லை. இதன் காரணமாக, அறுவை சிகிச்சையின்போது அனில் குமாரின் கண்கள் பாதிப்பில்லாமல் இருந்தன.
இதேபோன்ற சந்தர்ப்பங்களில் பெரும்பான்மையான நோயாளிகளின் கண்களை மருத்துவர்கள் அகற்ற வேண்டியிருக்கிறது எனத் தெரிவித்தார்.
பீகாரில் இதுவரை 500 க்கும் மேற்பட்ட மியூகோமிகோசிஸ் நோய் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக கொரோனா பாதித்த நீரிழிவு நோயாளிகள் மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நோயாளிகளிடையே இந்த நோய் பெரும்பாலும் கண்டறியப்படுகிறது.