சென்னை:
இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட கொரோனாவிற்கான கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதையடுத்து நாடு முழுதும், தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று தடுப்பூசி ஒத்திகையானது நடந்தது.மாநிலம் முழுவதும் 190 இடங்களில் நடைபெற்ற ஒத்திகையை, மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் இன்று ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன், “அடுத்த சில நாட்களில் நாடு முழுக்க கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும். முதலில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும், அடுத்து முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்” என்றார்.
இந்நிலையில் அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடனும் வரும் 11-ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார்.ஆலோசனையில் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.