நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல் சாசன தின கொண்டாட்டத்தின்போது மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார்.
மும்பையில், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அன்று பாகிஸ்தானில் இருந்து வந்த லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில், சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் ஓட்டல், நரிமன்ஹவுஸ், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரைடெண்ட் உள்ளிட்ட இடங்கள் வெடித்து சிதறின. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 166 பேர் உயிரிழந்தனர்.
மும்பை தாக்குதல் நடந்து 13-வது ஆண்டு நிறைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற வளாகம் மைய மண்டபத்தில் அரசியல் சாசன சட்ட தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் பிரதமர் மோடி உரையில்,
நாம் இன்று இங்கே சம்விதன் திவாஸ் கொண்டாடி வரும் வேளையில் 26/11 மும்பை தாக்குதலில் போது உயிரிழந்தவர்களின் தியாகத்தையும் அதனை தைரியமாக எதிர்கொண்டவர்களின் மன உறுதியையும் நினைவு கூறுகிறேன் என்று கூறினார்.
இந்த நாள் எதிரிகள் இந்தியாவிற்குள் நுழைந்து மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய துக்கதினம் என்றும் குறிப்பிட்டார். மேலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் நமது ராணுவ வீரர்களின் தியாகத்தையும் குறிப்பிட்டார்.
மேலும், பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை, நமது மாநிலங்களை இந்திய அரசியலமைப்பே இணைத்து ஒன்றுபடுத்துகிறது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.