பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை, ‘எனது சமூகவலைத்தள கணக்கை மக்களை ஈர்த்த 7 பெண்களிடம் ஒப்படைக்கப் போகிறேன். இவர்களின் அனுபவங்கள் லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும்’ எனத் தெரிவித்திருந்தார்.
அந்த அடிப்படையில் இன்று தனது பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவற்றை 7 சாதனைப் பெண்களிடம் ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து மகளிர் தினத்துக்குத் தனது ட்விட்டர் வாயிலாக வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மோடி, இன்றைய நாள் முழுவதும், 7 பெண் சாதனையாளர்கள் தங்கள் வாழ்க்கை பயணம் குறித்த தகவல்களை என்னுடைய சமூக வலைத்தளம் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள், உரையாடுவார்கள்.
இதனை அடுத்து, முதல் பெண்ணாக தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ், மோடியின் கணக்கில் இருந்து ட்வீட் செய்தார்.
ஃபுட் பேங்க் (Food Bank) என்ற அமைப்பின் மூலம் ஏழை மக்களுக்கு உணவளித்து வரும் இவர் பிரதமர் மோடியின் சமூவலைதளமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
ஹலோ நான் சினேகா மோகன்தாஸ், வீடு இல்லாதவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற பழக்கம் கொண்ட எனது தாயின் சிந்தனையால் ஈர்க்கப்பட்டவள். இதன் காரணமாக புட்பாங்க் இந்தியா என்ற முயற்சியை தொடங்கினேன்.
என் தாத்தாவின் பிறந்தநாள் அன்று சில குழந்தைகள் நலக் காப்பகத்துக்குச் சென்று உணவு வழங்கினேன். அப்படித்தான் இது தொடங்கியது. பின்னர் இதை ஃபேஸ்புக் பக்கமாகத் தொடங்கி அதன் மூலம் சில இளைஞர்களை என்னுடன் இணைத்துக்கொண்டேன். தற்போது அவர்களும் என்னைப்போலவே இந்தியாவின் பல மாநிலங்களில் ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகிறார்கள். எங்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்களிடமிருந்து பணமாகப் பெறாமல் பொருள்களாகப் பெற்று நாங்களே சமைத்து அனைவருக்கும் வழங்கி வருகிறோம்.
எனக்கு ஆர்வமாக இருப்பதைச் செய்யும்போது எனக்குள் ஒரு உத்வேகம், அதிகாரம் கிடைக்கிறது. எனது சக குடிமக்களும், குறிப்பாக பெண்களும் முன் வந்து என்னுடன் கைகோர்க்க வேண்டுமென விரும்புகிறேன்.
அனைவரும் குறைந்தபட்சம் ஒரு ஏழைக்காவது உணவளிக்க வேண்டும். இதன் மூலம் நாம் பசி இல்லாத உலகை உருவாக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.